Skip to content
Home » பொதுத் தமிழ் தகவல்கள் » கொன்றை வேந்தன் விளக்கவுரை

கொன்றை வேந்தன் விளக்கவுரை

கொன்றை வேந்தன் விளக்கவுரை

‘கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’

பொருள்

இதில் கொன்றை வேந்தன் எனக்குறிப்பிடுவது ‘சிவன்‘. இவ்வரியின் அடியில் செல்வன் என்பது சிவனுடைய புதல்வரான விநாயகப் பெருமானை குறிப்பிடுவதாகவும் ஒரு சிலர் முருகக் கடவுளை குறிப்பிடுறிகிறார் எனவும் கூறுகின்றனர். மேலும் இந்த பதிவில் கொன்றை வேந்தன் பாடல் வரிகள் பொருள் மற்றும் விளக்கம் பற்றி பார்ப்போம்.

கொன்றை வேந்தன் விளக்கம் | கொன்றை வேந்தன் பாடல் வரிகள்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஒருவருக்கு தாய் தந்தையரே கண்கண்ட தெய்வம் ஆவார்.

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
என்னதான் பக்தி இருந்தாலும் கோயிலுக்குச் சென்று(வாரம் ஒருமுறையாவது) இறைவனைத் வழிபடுவது மிகவும் நல்லது.

3. இல்லறமல்லது நல்லறமன்று
இல்லறவாழ்வே எல்லாவற்றிக்கும் மேலான நன்மை பயக்கக் கூடியது

4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
பிறருக்கு உதவி செய்ய மனம் இல்லாதவரின் பொருல்களை தீயவர் பறித்துக் கொள்வர்

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
அளந்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அல்லாது வம்சமும் சீர்கேடும்

7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
அறிவியல் அறிவுக்கு ஆதாரமாக இருக்கும் எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நம் இரு கண்கள்

8. ஏவா மக்கள் மூவா மருந்து
ஒரு செயலை செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் தேவர்களுக்கும் கிடைக்காத அமிர்தம் போன்றவர்கள்.

9. ஐயம் புகினும் செய்வன செய்
பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல காரியங்களை செய்

10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு
பெண் ஒருவனை மணந்த பின் புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்

11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது

12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
பொறாமைப் பேசுவது ஒருவனது வளர்ச்சியை குலைக்கும்.

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
சிக்கனமாயிருந்து தானியத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.

14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை
கணவன் சொல் கேட்டு நடப்பதே கற்பு ஆகும்.

15. காவல்தானே பாவையர்க்கு அழகு
கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு

ஆத்திச்சூடி விளக்கம்

16. கிட்டாதாயின் வெட்டென மற
நமக்குக் கிடைக்காது என்று தெரிந்ததை மறந்து விடு

17. கீழோராயினும் தாழ உரை
உன்னை விடத் தாழ்ந்தவராயினும் நயமாகப் பேசு

18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
பிறரின் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், உறவினர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்

19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
பலவானாக இருந்தாலும் கர்வப் பேச்சு கூடாது

20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை பற்றி யோசிக்காமல் அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்

21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
வாழ்வில் தாழ்வு வந்தபொழுதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லா உடைமையையும் சேர்க்கும்

22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்

23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி
தேவையிருப்பரை தேடி சென்று உதவி செய்தலே ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது

24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
கோள் மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது

25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
எல்லோரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் பகையாளி ஆவான்

26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
மலடின்றி வாழ்தலே குடும்பம் தழைப்பதற்கு அழகு

27. சான்றோர் என்கை ஈன்றோற்கு அழகு
பெற்றோருக்குப் பெருமை அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே

28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
தவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதாகும்.

29. சீரைத்தேடின் ஏரைத் தேடு
புகழோடு வாழ விரும்பினால் பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்

30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
எந்த நிலையிலும் சொந்தங்கள் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.

31. சூதும் வாதும் வேதனை செய்யும்
சூதாட்டமும் தேவையில்லாத வாதமும் துன்பத்தையே தரும்

32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
தவம் செய்த பலன் கிடைக்காமல் போனாலும் மற்றவருக்கு செய்த உதவியினால் கிடைக்கும் நன்மை கிடைத்தே ஆகும்.

33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
காவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்

34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
பிறருக்கு பொருள் கொடுக்குமளவு நீ இருந்தால் அவருக்கு உணவிட்டு பின் உண்ண வேண்டும்

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
பொருளுள்ளவர் மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
சோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தந்தை சொல்லே மந்திரம் என எண்ணி வேண்டிய செயலை செய்து முடிக்க வேண்டும்.

38. தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை
தாயை விட சிறந்த தெய்வம் இல்லை

39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
கடல் கடந்தாவது சென்று பொருள் தேட வேண்டும்

40. தீராக் கோபம் போராய் முடியும்
கோபமும் பகையும் சீக்கிரமாகப் போய் விட வேண்டும். இல்லையேல் அது பெரும் பிரச்சனையில் சென்று முடியும்

41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
கணவனுக்குத் துன்பம் என தெரிந்தும் கவலைப்படாத பெண்கள், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர்.

42. தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும் – எப்போதும் அவதூறுக் கூறிக் கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்.

43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
தெய்வம் கோபித்துக் கொண்டால், நம் செய்த தவமும் அழிந்து போம்

44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
பொருளைத் தேடிச் சேர்க்காமல் இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்

45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
தை மாதமும் , மாசி மாதமும் மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு

46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.

47. தோழனோடும் ஏழைமை பேசேல்
நெருங்கிய நண்பனிடத்தும் தம் வறுமை பற்றிப் பேசக் கூடாது

48. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
நல்லோர் நட்பு இல்லாமல் போனால் வாழ்வில் துன்பம் ஏற்படும்.

49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.

50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
சொன்ன சொல் தவறாது இருத்தலே, கற்றவர்க்கு அழகு

51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு
நீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும்

52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
சிறிய காரியமாக இருந்தாலும், சிந்தித்து செயல்பட வேண்டும்

53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
நல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்

54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
நம் மனதிற்கு தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.

55. நேரா நோன்பு சீராகாது
மனம் தடுமாறிய எந்த விரதமும் நன்றாக முடியாது

56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
சக்தியற்றவரிடமும் மனம் நோகுமாறு பேசக்கூடாது

57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
சிறியவர்களும் செய்யும் நற்செயலால் பெரியவர் ஆவர்

58. நோன்பு என்பது கொன்று தின்னாமை
உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
ஒருவர் செய்த புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும்

60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
சிறந்த உணவாக இருந்தாலும், காலமறிந்து உண்ண வேண்டும்

61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும்
அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்

62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை எதையும் தாங்கும் பலம் பெற்று விளங்கும்.

63. புலையும், கொலையும் களவும் தவிர்
புலாலுண்ணுதல், கொலை செய்தல், திருடுதல் இம்மூன்றையும் செய்யாதே

64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
கொடியவர்களிடம் நல்லொழுக்கங்கள் இருக்காது

65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
ஞானம் பெற்றோர்க்கு எந்த சுற்றமும் கிடையாது, எந்த கோபமும் கிடையாது

66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன்

67. பையச் சென்றால் வையந் தாங்கும்
நிதானமாகச் செய்யும் காரியங்களில் வெற்றி நிச்சயம்

68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
அனைத்துத் தீய பழக்கங்களையும் விட்டு விடு

69. போனகம் என்பது தானுழுது உண்ணல்
தான் முயன்று உழைத்து சம்பாதித்து உண்ணுவதே உணவு என்பதாகும்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
தேவ அமிர்தம் கிடைத்தாலும், பிறரோடு பகிர்ந்து உண்

71. மாரி அல்லது காரியம் இல்லை
மழையின்றி ஒன்றும் இல்லை

72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்

73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
மாலுமி இல்லாது ஓடம் செல்லாது

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்

75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
முதியோர்கள் அறிவுரை என்பது அமிர்தம் போன்றது

76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்

77. மேழிச் செல்வம் கோழைப் படாது
உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது

78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு
விலைமாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
பெரியோர் சொல்லை மறுத்து செய்த காரியங்கள் கெட்டுவிடும்

80. மோனம் என்பது ஞான வரம்பு
மௌனமே உண்மை ஞானத்தின் எல்லை

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்

82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
மழை வரத்து குறையுமானால் பூமியில் தான தர்மங்களும் குறைந்து விடும்

83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
விருந்தினரை உபசரிக்காத இல்லத்தில நல் ஒழுக்கம் இருக்காது

84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்
வீரனுடன் கூடிய நட்பு கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்

85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
யாரிடமும் எதையும் வேண்டாதிருப்பதே இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்

86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு

87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
தூய்மையான மனமுள்ளோருக்கு வஞ்சக எண்ணம் இருக்காது

88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை
அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை

89. வைகல் தோறும் தெய்வம் தொழு
தினமும் காலையில் எழுந்தவுடன் தெய்வத்தை வணங்கு

90. ஒத்த இடத்து நித்திரை கொள்
பழக்கப்பட்ட அல்லது சமமான இடத்தில் படுத்து உறங்கு

91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
படிக்காதவர்களிடம் ஒழுக்க உணர்வு இருக்காது.

Video – Learn Basic Astrology in Tamil

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

1 thought on “கொன்றை வேந்தன் விளக்கவுரை”

Comments are closed.