Skip to content
Home » தமிழ் கவிதைகள் » காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன் » Page 13

காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன்

தும்பியும் மலரும்

மகரந்தப் பொடியைத் தென்றல் – வாரிக்கொண் டோடி
அகம் நொந்த தும்பி எதிர் – அணியாகச் சிந்தும்!
வகை கண்ட தும்பி தன் – வயிடூரியக்கண்
மிகவே களிக்கும் அவள் – விஷயந் தெரிந்தே!
‘பூப்பெய்தி விட்டாள்என் – பொற்றாமரைப் பெண்
மாப்பிள்ளை என்னை அங்கு – வர வேண்டுகின்றாள்
நீர்ப்பொய்கை செல்வேன்’ என – நெஞ்சில் நினைக்கும்;
ஆர்க்கின்ற தீம்பண் ஒன்றை – அவளுக் கனுப்பும்!
அழகான பொய்கை மணி – அலைமீது கமலம்
பொழியாத தேனைத் தன் – புதுநாதன் உண்ண
வழிபார்த் திருந்தாள் உடல் – மயலாற் சிவந்தாள்!
தழையும்பண் ணொன்று வரத் – தன்மெய் சிலிர்த்தாள்.
கமழ் தாமரைப் பெண் இதழ்க் – கலைசோரக் கைகள்
அமையாது தாழ ஆ! – ஆ!! என்றிருந்தாள்.
இமைப்போதில் தும்பி காதல் – இசை பாடி வந்தான்
கமழ் தாமரைப் பெண் இதழ்க் – கையால் அணைத்தாள்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17